22 டிசம்பர் 2022

அன்று பிறந்து அன்றே இறப்பவர்கள்

அன்பை சிலுவையென எண்ணி
யாருக்காகவும் சுமக்காதவன்
பிரச்சணைகளைத் தலையணையாக்கி
நீட்டிநிமிர்ந்து படுத்துக்கொள்பவன்
 
அவன் காதலி
கட்டாயக் கல்யாணம் முடிக்கையில்
பந்தியில் பிரியாணி சாப்பிட்டவன்
 
அவன் தாய்
கண்ணீர்விட்டு கதறியதை
சலனமற்று வேடிக்கை பார்த்தவன்
 
அவன் நண்பன்
விபத்தில் ஊனமான போது
செய்தியென கேட்டு நகர்ந்தவன்
 
அவன் தாத்தா
கண்ணாடி பெட்டியில் இருக்கையில்
இரண்டாம் காட்சி சினிமா பார்த்தவன்
 
இன்பம் துன்பம் இரண்டிலும்
சமனிலைக் கொண்ட அவன்
கடவுளைக் கல்லெனவும்
பக்தனை கோமாளியெனவும்
நெடுங்காலமாய் சொல்லித் திரிகிறான்
 
பெரும் காற்று வந்தது
கொடும் மழை வந்தது
ஆழிப் பேரலை வந்தது
கொல்லைக் கொரோனா வந்தது
அவன் கூடுதலாய் ஐஸ் போட்டு
இரண்டு ஆரஞ்சு ஜுஸ் குடித்தான்
 
பத்து வருடங்களுக்கு பிறகு
திவ்யா ஈசன், நிவ்யா ஈசன்
எனும் இரட்டையர்கள்
அன்று பிறந்து அன்றே இறந்துவிட்டார்கள்
அன்று பிறந்து அன்றே இறப்பவர்கள்
என்ன வலியை ஏற்படுத்திவிட முடியும்
அவர்கள் தாய் அழவே இல்லை
எனவே அவன் அழத் தொடங்கினான்
பரபரப்பான சாலை என்றும் பாராமல்
பெரும் குரலெடுத்து ஓலமிட்டான்
 
மூன்றாம் நாள்
அந்த தாய் அழத்தொடங்கினாள்
இவன் வெறிக்கத் தொடங்கினான் முன்னைப் போல்
 
- மகேஷ் பொன்
 

 

விழாக் காலம்

இருப்பவன் கொண்டாட
இல்லாதவன் திண்டாட
ஊழிக்காலத்தின் தொடக்கம்
தேசியவிழாவாக அறிவிக்கப்படுகிறது
கடைத்தெருவில்
கிறிஸ்துமஸ் கூட்டம்
ரமலான் கூட்டம்
பொங்கல் கூட்டம்
இது மதநல்லிணக்க கூட்டம் போலும்
 
 
- மகேஷ் பொன்

 

மான் பிரியாணி

எதுகை, மோனை, சந்தம்
கலந்த ஒரு தித்திக்கும் டீயை
உனக்காக போட்டுத் தரலாம்
 
அனுபவத்தை சோறாகவும்
படிமத்தை சாம்பாராகவும்
குறியீட்டை பொறியலாகவும்
ஹைக்கூவை ஊறுகாயாகவும்
சமைக்கத்தெரியும் எனக்கு…
 
அந்தாதியை ரசமாக்குவேன்
முரண் தொடையை மோராக்குவேன்
 
அறுசுவை படையல் செய்வேன்
நான் செய்யும் மான் பிரியாணிக்கு
ஒருசில பிரியர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் சாப்பிட்டுவிட்டு
வாவ் சொல்வார்கள்…
 
அதற்காக
நீ என்னை சமைக்க சொன்னால்
பிய்ந்த தோசைதான் கிடைக்கும்
காஃபி கூட பதமாக கிடைக்காது
உப்பும் உரப்பும் சொல்லவா வேண்டும்
ஏதோ ஒன்று கூடி ஒன்று குறைந்துவிடும்
பின்னர் அது
நீ எழுதிய கவிதை போல்
உரிப்பொருள் இல்லாமல் போய்விடின்
அதை நாய்களுக்குதான் போட நேரிடும்…
 
எனக்கு சமையல் வராது
ஆகவே நான் கவிதை செய்கிறேன்…
நீ உன் விருந்தினரோடு வந்து
சாப்பிட்டுவிட்டு போ
அதே இளமான் பிரியாணியை
 
- மகேஷ் பொன்
 

 

அலர்

பெரும் துயரினை
கடந்துசெல்லும் தூரத்திலிருந்த
மதுக்கடையைக் கடந்துசெல்வதே
ஒரு துயரென ஆகிவிட்டது...
இன்று இவ்வூரில்
எங்குமே மகிழ்க்கூடங்கள் இல்லை
நுரைப்பொங்கிய ஞாபகங்களுடன்
ஒவ்வொரு மதுக்கடையையும்
ஒரு கவிஞனாக
எவ்வாறு கடந்து போவேன்...
இதே நாளில்
அக்கா மகள் குறித்து
இவ்வூர் அலர் கொண்டுள்ளது
இப்போது
ஒரு போத்தல் பீர் வேண்டும்!
ஒரு பொக்கே மலர் வேண்டும்!!
இவ்வூரடங்கு காலத்தில்
பரிவுடையோரின் கருப்பு கோப்பை
முதல் சுற்றிலேயே
பத்தாவது சுற்றுக்கு இழுக்கிறது
ஆதலால்
என் கோப்பையின் மதுவில்
அந்த பொக்கேயிலிருந்து
நறு மலர்களைப் பிய்த்து தூவுங்கள்
இவ்வூர் மேலும் அலர் கொள்ளட்டும்...
 
- மகேஷ் பொன்
 

 


ஓரமாய் நிற்பவர்கள்

நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம்;
ஒரு பேருந்துநிறுத்தத்தில்…
ஒரு கோவில் சன்னதியில்…
ஒரு பள்ளிக்கூட வாயிலில்…
ஏதோ ஒரு கடைகோடியில்…
 
நாங்கள்
நெடுங்காலமாய் நின்றுகொண்டிருக்கிறோம்
ஒரு ஓரமாய்! அங்கேயே!!
இப்போது கொஞ்சம் இருக்க வேண்டும்
உங்கள் சிம்மாசனத்தில் கூட இல்லை
எங்கள் இருக்கையில்தான்…
 
நறுமணம் கமழும் நீங்கள்
விலகி செல்கையிலும் சரி
விலக்கி வைக்கையிலும் சரி
மூடை நாற்றம்தான் குமட்டுகிறது…
 
சாதி ஊத்தை நாறும்
உங்கள் வாயை
பயோரியா கொண்டு
நீங்கள்தான் துலக்க வேண்டும்…
 
தீண்டாமை அழுக்கு ஏறும்
உங்கள் உடலை
ஹமாம் கொண்டு
நீங்கள்தான் குளிக்க வேண்டும்…
 
ஆணவத்தின் மேட்டிமை மின்னும்
உங்கள் ஆடையை கலைந்துவிட்டு
சமத்துவத்தை
நீங்கள்தான் உடுத்த வேண்டும்…
 
அறமின்றி அறிவொளி வீசும்
உங்கள் பட்டங்களை துறந்துவிட்டு
சமூக நீதியை
நீங்கள்தான் படிக்க வேண்டும்…
 
நாங்கள்
நெடுங்காலமாய் நின்றுகொண்டுதானிருக்கிறோம்
ஒரு ஓரமாய்! அங்கேயே!!
இப்போது கொஞ்சம் இருக்க வேண்டும்…
இருக்கையை உருவ எண்ணி
வெறுங்கையில் அயுதத்தைத் திணிக்காதீர்!
 
- மகேஷ் பொன்


 

அன்பு ஒன்றுதான் அனாதை

எனக்கும் தாய் தந்தை இருக்கிறார்கள்
அண்ணன் இருக்கிறான்
தங்கை இருக்கிறாள்
நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்
ஊர் இருக்கிறது
உறவுகள் இருக்கிறது
என்றாவது பேசிக்கொள்கிறோம்
என்றாவது விசாரித்துக்கொள்கிறோம்
ஆயினும்
என்றென்றும்
அவர்கள் நினைவுகளில் நான் இருக்கிறேன்…
 
உன்னுடன்தான் பெரும் அக்கறையாயிருக்கிறேன்
உன்னுடன்தான் தினசரியை சிலாகிக்கிறேன்
உன்னுடன்தான் நெடுந்தூரம் பயணிக்கிறேன்
உன்னுடன்தான் உணவைப் பகிர்ந்துண்கிறேன்
உன்னுடன்தான் பரஸ்பர உரிமைக்கொள்கிறேன்
உன்னுடன்தான் இலட்சியக் கனவுக்காண்கிறேன்
உன்னுடன்தான் வாழ்கிறேன்
 
நீயாகவே குறுஞ்செய்தி அனுப்பும் வரை
நீயாகவே அழைத்து பேசும் வரை
நீயாகவே வந்து சந்திக்கும் வரை
நீயாகவே நலம் விசாரிக்கும் வரை
என்னால் காத்திருக்க முடியாது
ஆகையால்
நானாகவே சொந்தம் கொண்டிருக்கிறேன்
எனக்கு உன்னை அத்தனை பிடித்திருக்கிறது…
 
இன்று
குறுஞ்செய்தி அனுப்ப இயலவில்லை
தொலைப் பேச இயலவில்லை
நேரில் சந்திக்க இயலவில்லை
நலம் விசாரிக்க இயலவில்லை
ஆனாலும்
எப்போதும் போல்
என் நினைவுகளில் நீ இருந்தாய்…
 
எனக்கு காய்ச்சல் அடித்திருக்கலாம்
எனக்கு வேலைப்பழு அதிகரித்திருக்கலாம்
எனக்கு பிடித்தமானவள் ஓடிப்போயிருக்கலாம்
எனக்கு கோர விபத்து நேர்ந்திருக்கலாம்
ஆகையால்
உன்னை தொடர்புகொள்ள இயலவில்லை
 
பின்னிரவு வரை
யாருடனெல்லாமோ அளவலாவியிருந்தாய்
எனக்கு என்ன ஆனதென
நீ கேட்க வேண்டியதில்லை
உனக்கு என்ன ஆனதென
நான் கேட்பேனே
பின்பு நீயாகவே
வீடடைந்திருப்பாய் என நம்பிக்கொண்டேன்
அதை சொல்வதற்கு கூட
உன் நினைவுகளில் நான் இல்லை என்பது
துரதிர்ஷ்டமான உண்மை
 
ஆனால்
நீ எப்பொதும் போல் தொடர்புகொள்ளலாம்
உன் தேவை வந்தவுடன்
அல்லது
உன் நெட் பேலன்ஸ் முடிந்தவுடன்
 

 

மணவாழ்க்கை

நீடூழி வாழ்வதற்கு
காதல் மட்டுமல்ல
இவ்வொப்பந்தமே போதும்
 
- மகேஷ் பொன்

 

காடு செய்ய கடமைப்பட்டவன்

பால்யத்தில் யான் வாழ்ந்த
ஓலைவீட்டைச் சுற்றி
மூன்று பூவரசும்
இரண்டு வேம்பும்
இரண்டு மாவும்
ஒரு நெல்லியும்
ஒரு பனையும் இருந்தன…
 
நல்ல விஸ்தாரமான
கான்கீரிட் வீட்டை கட்டிவிட்டு
பால்கனியில் நிற்கிறேன்
எனது நினைவுகளிலிருந்து
முதலில் நிழல் விலகியது
பின்பு பூக்கள் உதிர்ந்தன
 
பிறகு மெல்ல மெல்ல
சிட்டுகள் பறந்தன
கிளிகள் பறந்தன
மைனாக்கள் பறந்தன
குயில்கள் பறந்தன
வவ்வாள்கள் இலங்கைக்கு பறந்தன
இறுதியில்
தூக்கனாங்குருவிகளின் வீடுகள் இடிந்தன
 
தொட்டில் கட்டிய
மரம் ஒன்று
கட்டிலாகிவிட்டது
வத்தலுப்புத் தூளில் சுவைகூட்டிய
மரம் ஒன்று
கதவாகிவிட்டது
 
என் அம்மாவின் அம்மா
வடலியிலிருந்தே வருடிகொடுத்து வளர்த்த
மரம் ஒன்று மட்டும்
நினைவுகளில் தேங்கிநிற்கிறது
அதற்கு என் அம்மாவின் வயது
அதற்கு என் அம்மாவின் சாயல்
அதனுடன் பேசியிருக்கிறேன்
அதனுடன் விளையாடியிருக்கிறேன்
 
அது எங்கள் பழைய வீட்டில்
கூரை வேய்தது
பெருக்கி அள்ளியது
பாய் விரித்தது
காஃபி போட்டது
பாயாசம் கிண்டியது
பெட்டிசீர் செய்தது
திருநாள் படையலிட்டது
ஒரு பருந்தின் புகழிடமாய் இருந்தது
 
அது முற்றத்தில் நின்றபோதும்
பழம் நழுவி நள்ளிரவில்தான் விழுந்தது
ஆச்சியையே மறந்துவிட்டு
”பேச்சி இல்லம்” கட்டிய
எங்கள் தலையில் விழவில்லை
 
இப்போதும்
நுங்கின் கண்களை
நோண்டுபவர்களைக் கண்டால்
என் இடக்கண்ணில்
பதநீர்தான் பொங்குகிறது
 
மரங்களின் நினைவுகள் அற்ற
ஒரு நாளில்
வேப்பங்கொட்டையை
காகம் எச்சமிடுகிறது
நெல்லிக்கொட்டையை
அண்னி தப்பவிடுகிறது
பனங்கொட்டையை
பன்னி சப்பிப்போகிறது
 
மூன்று தலைமுறைகளின்
வேர் அறுத்த பாவம்
மூவாயிரம் தளிர்களுக்கு
நீர் ஊற்றினாலும் தீராது
ஆகவே
நான் காடு செய்ய வேண்டும்
 
- மகேஷ் பொன்
 

 

கொடும் காலம்

”பக்காடி லெமன்” குறித்து
பேசவேண்டிய காலம் வந்துவிட்டது
நண்ப! இப்போது முழங்கு
அரசின் கள்ள மெளனம் கலையட்டும்
அல்லது
பிரியரின் காதில் தேறல் பாயட்டும்
 
- மகேஷ் பொன்
 

 

முதன்முதலாய்

முதன்முதலாய்
பாண்டியநாட்டுத் தங்கம் பார்த்தேன்
பின்னர்
நிரோசாவின் தீவிர ரசிகனாக இருந்தேன்…
 
முதன்முதலாய்
பாத்திமா டீச்சரை காதலித்தேன்
பின்னர்
பதினாறு யுவதிகளைப் புணர்ந்தேன்…
 
ஆனாலும் இந்த முதன்முதலாய்
இளையர் முதன்முதலாய்
பீர் குடித்த நாளின்
நுரைநுரைப்பு போல் இல்லை
கன்னியர் முதன்முதலாய்
தாவணி கட்டிய நாளின்
கிளுகிளுப்பு போல் இல்லை
ஒரு வழக்கமான நாளெனவே இருந்தது…
பார்த்து, பேசி, பழகி
பரிச்சயம் கொண்டது போல்
எப்படி நிகழும்
ஆனாலும் இது முதன்முதல் சந்திப்பு!
 
முதன்முதலாய்
உன்னை பார்த்தேன்!
ஒளிபொருந்திய உன் கண்களை!!
அன்றைய இரவில்
நிலா
முதல் நாள் பிறையாகதான் இருந்தது
நீதான்
பலநாள் பவுர்ணமியாக இருந்தாய்…
 
நீ நீ
என் பால்ய தோழியா
என் மூன்றாவது தங்கையின் அறைவாசியா
என் அத்தை வீட்டில் வளர்ந்தாயா
என் மலைப்பயணங்களில் உடனிருந்தாயா
எனது திருவிழாக்களில் கலந்துக்கொண்டாயா
இல்லையென்றால்
என்னுடன் பள்ளிகூடம் பயின்றாயா
என்னை காதலித்து ஏமாற்றினாயா
இன்னும் இல்லையென்றால்
என்னுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு
என் நினைவுகளிலிருந்து
உன்னை மட்டும் அழித்துவிட்டாயா?
 
என் எதிர் வீட்டில் வசிக்கவில்லை நீ
என் ஊரில் கூட இல்லை நீ
முன்னெப்போதுமே பார்த்ததில்லை உன்னை
ஆனாலும் அன்று உன்னை பார்த்தது
முதல்முறையா?
ஆயிரமாவதுமுறையா?
உன் நிறைமுகம்
என் நினைவுகளில் அங்ஙனம் நிறைந்திருக்கிறது...
 
- மகேஷ் பொன்
 

 

அடிமை சாசனம் 1 x 2

அடிமை - 1
விதிக்கப்பட்ட அடிமைகள்
தெருவுக்குத்தெரு இருக்கிறார்கள்
அடிமை - 2
வயப்பட்ட அடிமைகள்
கோ-லிப் பாரடைஸில் இருக்கிறார்கள் 
 
நான் நான்
மூன்றாம் தெரு முதல் வீட்டில் இருக்கிறேன்
எழ வேண்டும்
ஓட வேண்டும்
உழைக்க வேண்டும்
கொஞ்சம் வாசிக்க வேண்டும்
பின்னிரவு தூங்க வேண்டும்
மறுபடியும் எழ வேண்டும்
இன்னும்
திண்ண வேண்டும்
பேல வேண்டும்
அதே இழவுதான்
ஒவ்வாமையுடன் சண்டையிட வேண்டும்
செக்குமாடு போல் மிக்க அடிமை நான்…
 
வெறும் 28 கிலோமீட்டர் வாழ்க்கை
சிறு தேசம் இதை ஆக்கிரமித்துக்கொண்டு
ஒரு பேரழகி
இரு விழி உருட்டி
பெரும் படை திரட்டி
மறுபடியும் அடிமையை அடிமைச்செய்கிறாள்
ஆனாலும் வெறுப்பு கொள்ளாமல்
மேலும் விருப்பு கொள்கிறது அடிமைமனம்
 
இன்னும் நான்
அவள் பெயருக்கு அடிமையானேன்
அவள் பார்வைக்கு அடிமையானேன்
அவள் பேச்சுக்கு அடிமையானேன்
அவள் அழகிற்கு அடிமையானேன்
அவள் அன்புக்கு அடிமையானேன்
அவள் அங்கமைப்பிற்கு அடிமையானேன்
அவள் திமிருக்கு அடிமையானேன்
அவள் கையசைவிற்கு அடிமையானேன்
 
வல்லரசின் இளவரசிகள் எப்போதுமே
எல்லா அடிமைகளையும் போருக்கு அனுப்பிவிட்டு
நல்ல அடிமையொருவனை அந்தபுரத்திற்கு அழைத்து
செல்லமாய் முத்தமிடுவார்கள் என்பதும்
கள்ளத்தனமாய்ப் புணர்வார்கள் என்பதும்
சொல்லப்படாத வரலாற்று உண்மையெனில்
இந்த அடிமையின் இளவரசனை
அந்த இளவரசி வயிற்றில் சுமப்பதும் உண்மையாகலாம்
 
இந்த குடும்ப அடிமைக்கு
உருப்படியாக செய்ய நிறைய இருக்கிறது
ஆகவே
இப்போது நான்
அப்பேரரசிக்கு எதிராக
விடம் தடவிய வாள் உயர்த்தலாம்
 
ஆனாலும்
இந்த நைஸிற்காகதான்
மாமுனிகளின் நடத்தைகள் பிறழ்ந்தன
மாமன்னர்களின் மணிமுடிகள் சரிந்தன
சாதாரண அடிமை என்ன செய்வான்
ஆகவே
இப்போது நான்
அப்பேரழகிக்கு எதிராக
விரகம் தடவிய கோல் உயர்த்தினேன்
 
பரஸ்பர அடிமைத்தனம் இதுவென தெரிக
மீபுனித காதல் மனம் இதுவென புரிக
விதிக்கப்பட்ட அடிமைகள்
வயப்பட்ட அடிமைகள் ஆக
நம் பண்பாட்டில் தடையுள்ளது
ஆயினும்
அடிமை - 1ல் நான் இருக்கிறேன்
அடிமை - 2ல் நான் இருக்கிறேன்
 
- மகேஷ் பொன்

 

கிணற்றை எட்டிப்பார்ப்பவர்களுக்கு…

நல்லெனும் யாமத்தில்
புன்னை நிழல் விழும்
புறக்கடைக் கிணற்றில்
பாங்கி டார்ச் அடிக்கிறாள்
 
மதி என்றால்
நிலவு என்றோ
அறிவு என்றோ
கொஞ்சமும் நம்பாத தலைவி
துஞ்சாமல் பரிதவிக்கிறாள்
 
பிறைமதி வளர்ந்து
நிறைமதி ஆனதும்
கிணற்றுத் தவளைக்கு
இரவா பகலா எனக் குழப்பம்
இப்போது
சுள்ளெனும் மதியத்திலும்
ஒல்லெனும் ஊர் டார்ச் அடிக்கிறது
 
மதி;
வண்ணங்களால் ஒளிர்வது
சமயத்தில் பறக்குமாம்
அது துரிசையில் லயித்திருக்குமாம்
இனிவர் ஒருவர் முனிவர் ஆனதற்கு
அதுதான் காரணம் என்றார்கள்
பேருந்துநிறுத்தத்தில் பார்த்தவர்கள்
அதை மோகினி என்றார்கள்
பகல் எல்லாம் திரிந்துவிட்டு - அது
இரவு கிணறடையும் எனக் கட்டினார்கள்
கடுப்பான நிகண்டொன்று
மதி என்றால்
’மதித்தல்’ என்றும்
’தோழமையை மதி’ என்றும்
பொருளோடு எடுத்துக்காட்டியது
 
ஆயினும்
கிணற்றை எட்டிப்பார்த்தவர்கள்
இறைத்து தள்ளினார்கள்
வாளிக்கொரு மதியென
999மதிகள் வெளியேறியதும்
மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ய
அம்மதி எங்கோ மறைந்துகொண்டது
அப்போது பெருமூச்சு விட்டவர்களுக்கு
அகராதி படித்த தலைவன் சொன்னான்
மதி என்றால்
ஸ்பெசல் தோசை என்றும்
தான் அதை
இரவு உணவாக சாப்பிடுவேன் என்றும்
 
- மகேஷ் பொன்
 

 

நள்ளிரவுப் பூனை

வெளியில் என்ன சத்தமென
அறையின் கதவைத் திறக்கிறேன்
மரங்கள் பேயாட்டம் ஆடின
புள்ளினங்கள் சத்தத்துடன் பறந்தன
மழை ஊத்தத் தொடங்கியது
கடலலை மேலும் ஆர்ப்பரித்தது
தூரத்தில் நாய் ஊளையிட்டது
 
அப்படியே கதவைச் சாத்திக்கொண்டேன்
யாரும் வரவில்லை
எல்லாம் இருந்தபடியே இருந்தது
நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருந்த
ஸ்டிக்கர் பொட்டை மட்டும் காணவில்லை
வந்தது நீயா? பேயா?
ஆண்கள் பொட்டு வைப்பார்களா என்ன
 
- மகேஷ் பொன்

 

போதை இரவு

நேற்றைய இரவில்
நான் சமநிலையில் இல்லை
அதனால் சொன்னதெல்லாம்
உண்மையாக இருக்கக்கூடும்
ஆனாலும் நீ
வேண்டாதவற்றை விட்டுவிடலாம்
ஏனெனில்
இன்று எனக்கு
எதுவும் நினைவில் இல்லை
 
இப்போது
சுயநினைவுடன் சொல்கிறேன்
என் மூன்றாவது தங்கையின்
சாயல் உனக்கு…
 
- மகேஷ் பொன்

 

ஜெய் பீம்!

அடக்குமுறைக்கு எதிராக
வல்லாதிக்கத்திற்கு எதிராக
எல்லோரும்
முறுக்கிய கையை உயர்த்தினார்கள்
ஒருவன் மட்டும்
கூர்வாளை உயர்த்தினான்
 
புரட்சி;
எப்போதுமே இரத்த நெடி வீசுவது
அப்படித்தான் அவன்
நீல இரத்தத்தில்
நீதியை எழுதினான்
 
பின்னர்
சட்டம்; சமத்துவம் கொண்டது
சமூகம்; சுதந்திரம் கொண்டது
ஆதலால்தான்
அவனது ஆறாம் விரல்
வெறும் எழுதுகோல் அல்ல
ஒரு கூர்வாள் என்றானது
 
இப்போது
மீண்டெழுவதற்கான வாள்வீச்சில் சொட்டும்
ஒவ்வொரு துளி இரத்தமும்
ஜெய் பீம்! ஜெய் பீம்!! என்றானது
 
- மகேஷ் பொன்

 

இங்ஙனம் மயங்குதல்

நான் ஆதாம்
நான் ராஜா
நான் ஆண்
 
நீ ஏவாள்
நீ ராணி
நீ பெண்
 
நாம் வாழ வேண்டும்
நாம் ஆள வேண்டும்
நாம் புல்ல வேண்டும்
 
நான் பக்காடி லெமன்
நீ லெஹர் சோடா
நாம் போதை கொள்ள வேண்டும்
 
- மகேஷ் பொன்

 

நிலாச் சோறு

ஓங்கி தட்டினேன்
கதவு திறந்தது
லேசா பற்றவைத்தேன்
உலை கொதித்தது
கோர பசி நாளில்
மாறி மாறி தின்னலாம் என்றாள்
 
- மகேஷ் பொன்
 

 

பேரழகை கடந்து போதல்

இன்று ஒரு ரம்மியமான நாள்
எமதர்மன் தனது பாசக்கயிறை
ஏஞ்சலிடம் கொடுத்தனுப்பியுள்ளான்
ஆதலால்தான்
தேவலோக ரதி அவள்
பூலோக வீதியில் உலவுகிறாள்
 
திரும்பி பார்த்தாக வேண்டும்
அப்படி ஒரு முகவெட்டு...
லயம் பிசகாத செய்நேர்த்தி அவள்
பொன் வண்ண மேனி
கார் வண்ண கூந்தல்
தேனுறும் இதழ்கள்
பாலுறும் பல்வரிசை
சிறுத்த இடை
பெருத்த மல்லை
சேதாரமற்ற ஒய்யாரம் அவள்
 
மென்னகை ததும்புகையில்
கன்னத்தில் குழி விழுகிறது…
அவள் கண்களை உற்று நோக்கினால்
அதில் அபயக்குரல்கள் கேட்கிறது
 
பேரழகின் முன்
யாவும் ஸ்தம்பித்து நிற்கிறது
பல்சர்220ல் வந்த ஒருவன் மட்டும்
பார்த்த மனம் பார்த்தவண்ணம்
இப்பரபரப்பான சாலையில்
கனரக வாகனத்தின் சக்கரத்தில் புகுந்து
அப்பேரழகியைக் கடந்து போகிறான்.
 
இன்றைய ரம்மியத்தை
சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது…
 
- மகேஷ் பொன்


போ! உன் எல்லாக் காதலும் ஆசிர்வதிக்கப்பட்டன

இரத்தத்தில் வரையப்பட்ட கடிதத்தை
புத்தகப்பையில் சுமந்து வந்தபோது
காதலால் சிவந்த உன் கன்னத்தை
மேலும் சிவக்கச் செய்தேனே
அந்த வன்மத்தை மன்னித்துவிட்டாய்தானே
 
ஐம்பொன்
கொள்ளைப் போகும் என்றார்கள்
பைங்கிளி
திசைமாறிப் பறக்கும் என்றார்கள்
 
ஒரு மழைநாளில்
இல்லத்தில் இடிவிழும் என்றிருந்தேன்
தூர வீதிகளில்
குலவேரைத் தேடக்கூடும் என்றிருந்தேன்
 
எறியப்பட்ட கற்களெல்லாம்
தூவானமாய் பொழியட்டும்…
உன் கவிதைகளில் ஒன்றை
என் அக்காவுக்கு படித்துக்காட்டு
உன் அப்பாவுக்கு விளக்கிச்சொல்
 
எப்போது வளர்ந்தாய்?
இப்போது
உன் ஒற்றைக் காதலை அல்ல
பத்து காதலாக இருந்தாலும்
நானே ஆசிர்வதிக்கிறேன்…
 
போ!
உன் காதலால் இந்த மலையை
எங்கெங்கும் பூக்கச் செய்!
 
- மகேஷ் பொன்

 

கூர்த் தீட்டப்பட்ட ஒரு சொல்

என்னிடம் ஒரு சொல் இருந்தது
அது அத்தனை சாது
மண்டியிட்டு தொழுவதைத் தவிர
அதற்கு எந்த தீவீரமும் தெரியாது
ஆனாலும் அச்சொல்லுக்கு
ஒரு உயரியப் பொருள் இருந்தது
அதைக் கேட்பார்தான் யாருமில்லை
இன்று அது வீதியில் இறங்கி
தனியே கையை உயர்த்தி
தன் பொருளை உரக்க கத்தியது
எவ்வளவு கத்தியப்போதும்
பெரும் கூச்சலின் நடுவே
சரியாக யார் காதிலும் உறைக்கவில்லை
என் நாடு
என் உரிமை
என் நீதி
சமத்துவம்
சகோதரத்துவம்
என ஆளாளுக்கு ஒருவாறு புரிந்துகொண்டனர்
அந்த சொல்லும் சளைக்காமல்
அத்தனைக்கும் பொருளாகி நின்றது
இனி
அடக்குமுறைக்கு எதிராக
”அல்லாஹூ அக்பர்” என்றாலும்
பொருத்தமாகதான் பொருள் தரும்…
 
- மகேஷ் பொன்
 

 

அவரவர் இழப்புகளின் வலி

நடுத்தர வயதுப் பெண் பிரிவாற்றி
எத்தனைக் காலம் ஆற்றியிருப்பாள்
மகனின் மணம் பற்றி
இன்னும் யோசிக்கவே இல்லை
மூத்த மருமகனுக்கு கொடுத்துதவ
மாமியாரால் எப்போதும் முடியாது
 
மரச்சீனி தோட்டத்து வேலை
பாதியில் கிடக்கிறது
மலைப்பிரதேசத்து இவ்வூரில்
இனி பஞ்சர் பார்க்க ஆளில்லை
 
அண்டை வீட்டுக்காரனுக்கு
இரவல் பீடி தடைப்பட்டுவிட்டது
பகலில் பலாப்பழம் கொய்யவும்
இரவில் இளநீர் திருடவும்
இடையூறு களையப்பட்டுவிட்டது
ஒரு கதை சொல்லி
தன் கதைகளை நிறுத்திக்கொண்டான்
 
நூறு கைமாத்து கொடுத்தவன்
நூறுமுறை சொல்லிவிட்டான்
ஆயிரத்தில் கடன் வாங்கியவர்கள்
திருப்பிக் கொடுத்தால் உண்டு
அவன் முன்வாயில் வெளியேறியதும்
வறுமை பின்வாயிலில் உட்புகும் 

நிரம்பாத பக்கங்கள் நிரம்ப இருக்க
எழுதிக்கொண்டிருக்கும் போதே
ஒரு துளி பாம்பின் விஷம்
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது….
 
- மகேஷ் பொன்
 

 

நல்லதொரு வாய்ப்பு

அப்பா இறந்த வீட்டில்
இழப்பின் வலியொன்றுமில்லை
ஆனால் அழத்தோன்றியது
எதற்காகவோ அழுதேன்
 
 
- மகேஷ் பொன்
 

ஆனாலும் காதலிக்கிறேன்

ஈருடல் ஓருயிர் நட்புதான்
12 பொருத்தங்களும் உண்டுதான்
 
ஒரே அறையில்
நீ உடை மாற்றிக்கொண்டிருக்கிறாய்
நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
 
என் பார்வையின் முன்
நீ வெட்கம் கொண்டதில்லையே
உன் நிர்வாணத்தின் முன்
நான் இச்சைக் கொண்டதில்லையே
 
உடன் நடப்பதும்
ஒரு அரவணைப்பும்
ஒரு முத்தமும்
கற்பை கலங்கம் செய்யாதிருக்கட்டும்
 
எல்லா முத்தங்களும்
காமம் உடைத்தல்ல
அன்புடைத்தும் மிஞ்சும்
சில முத்தங்கள்
 
எல்லா முத்தங்களிலும்
சர்க்கரைதான் இனிக்க வேண்டுமா
ஒரு முத்தத்தில்
உப்பும் உவர்க்கட்டுமே
 
உன்னால் கூடுமா என்ன
என்னுடன் புணர?
 
மிஞ்சும் போதையில் வந்தாலும்
துஞ்சும் நின் ஆடைகள் கலைந்து
நான் நான்
எங்ஙம் புணர்வேன் என் செல்லமே!
 
- மகேஷ் பொன்