பின்நவீனத்துவம் – பொருத்தப்பாடு


பின்நவீனத்துவம் – பொருத்தப்பாடு

பின்நவீனச் சிந்தனைப்போக்கு அரசியல், சமூகம், சினிமா, கலை, இலக்கியம், பண்பாடு என எல்லா தளங்களிலும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிலும் அது ஒட்டுமொத்த மாற்றங்களைச் செய்துவிடாவிட்டாலும் பொருத்தப்பாடுடையச் சில விளைவுகளை உண்டுபண்ணியுள்ளதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பின்நவீனத்துவத்தை ஒரு வாசிப்பு முறையாக கொண்டு நோக்குவோமெனில் அதற்கான பொருத்தப்பாடுகளை, நாம் சங்க இலக்கியத்தில் கூட கண்டடைய முடியும். கலிங்கத்து பரணியிலும் திருக்குறலிலும் பின்நவீனத்துவம் பயின்று வந்திருப்பதைக் காணலாம். எனினும் இன்றைய நிலையில் பின்நவீனச் சிந்தனைக்குப் பொருந்தி வரும் சிலப்பதிவுகளைக் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்துக்காட்டலாம். அவை,

அரசியல் தளத்தில்:
பெரியாரை தமிழ்ச் சூழலின் மிகச்சிறந்த பின்நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும். ஏனெனில் மதம், மரபு, நம்பிக்கை போன்றவை மூலம் கட்டமைக்கப்பட்டிருந்த பல பெருங்கதையாடல்களை முதலில் கட்டுடைத்தவர் அவர்தான். பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச் சூழலில் ஆரம்பித்துவைத்துவரும் அவரே. சான்றாக டிசே தமிழன் கூறுவதுபோல், ”தமிழ் ஒரு நீசபாசை' என்று பெரியார் கூறியதை, தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக் கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களையும் பெண்களையும் இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. எனவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் அவ்வாறு கூறினார்.”1  என்று அதனை பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.
இன்று  பெருங்கதையாடல்கள் தகர்க்கப்பட்டுள்ளன. சாதியப்படி நிலைகள் செயல் இழந்துவிட்டன. தலித்தியம், பெண்ணியம் போன்ற சிந்தனை முறைகள் வலுப்பெற்றுள்ளன. மாணவர் இயக்கங்கள், சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், வேலை இல்லாதோர் இயக்கங்கள், இன உரிமை இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்கள் என பல்வேறு இயக்கங்கள் வழி தங்களது உரிமைக்குத் தாங்களே குரல் கொடுக்கத் தொடங்கி அதிகார வர்க்கங்கள் தம்மீது கட்டிய இறுக்கங்களைக் கட்டவிழ்க்கத் தொடங்கிவிட்டன. அதன்படி சமூக கட்டமைப்புகளிம் மாற்றம் கண்டுள்ளன. அதிகாரம் மையம் கலைந்து இன்று பரவலாக்கப்பட்டுள்ளது.

சமூக தளத்தில்:
சமூகத்தில் இன்றைய நவீனச் சூழல் பல வாழ்வியல் மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது. அதில் ஒன்று எல்லோரும் கிடைமட்ட பரப்பிற்கு வந்து கொண்டிருப்பது. இதற்கு சான்றாக 'கையயேந்தி பவன்' உணவகச் சூழலைச் சொல்லலாம். இங்கு ஹோட்டல்களில் உள்ளதைப்போல் குளிர்விப்பான் அறை (AC room), குடும்ப அறை (Family room) என்று பாகுபாடுகள் கிடையாது. தீண்டாமை ஒழியாத கிராமத்தின் டீக்கடைகளில் உள்ளதைப்போல் இரட்டைக் குவளைகள் கிடையாது. கையேந்தி பவனுக்கு சாப்பிட வந்துவிட்டால் உணவை கையில் ஏந்திக்கொண்டு சாலையோரம் நின்றுதான் சாப்பிட வேண்டும். வந்தவன் Innovo car-ல் வந்தாலும், நடந்து வந்தாலும் இங்கு ஒரே ஒழுங்குதான் கடைபிடிக்கப்படும். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என எந்த அதிகார மையமும் இங்கு தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. இங்ஙனம் அதிகார படிநிலைக் கட்டமைப்பை சமூக தளத்தில் உடைத்துவிட்ட கையேந்தி பவன் ஒரு பின்நவீன வரவுதான்.
சமூக வலைதளங்களின் தொடக்க காலத்தில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் இருந்தது, அவர்கள் வெறும் காட்சி பொருளாக மட்டுமே பாவிக்கப்பட்டதால் பின் அவர்கள் துணிந்த பங்குகொண்டபோதும் அது அவர்களுக்கு பற்பல பிரச்சணைகளை உருவாக்கியது. அதனால் ஒரு புகைப்படத்தை பதிவேற்றவே அவர்கள் தயங்கினர். ஆனால் இன்று நிலமை மாறி இருக்கிறது. Facebook, whatsap போன்ற சமூக வலைதளங்களில் அவர்களும் கருத்திடுகிறார்கள் படங்களை பதிவேற்றுகிறார்கள். Musicaly, Tiktok போன்ற செயலிகள் மூலம் அரைகுறை ஆடையில்கூட ஆடி களித்து தங்களின் கருத்துகளை, பொழுதுபோக்கு நகைச்சுவை காட்சிகளை வெளியிடுகின்றனர். இதனால் இன்று பெண்ணின் உடல்குறித்த கருத்தாக்கங்கள் மாறியிருக்கின்றன. கற்பு என்பதற்கான வரையரைகள் கட்டுடைக்கப்பட்டுள்ளன. இப் பின்நவீன சமுகம் அதை புரிந்துகொண்டு நடப்பது ஒரு நல்ல சிந்தனை மாற்றமே.

சினிமா தளத்தில்:
மேற்கத்தியச் சூழலில் பின்நவீனத்துவத்துடன் முழுமையாகப் பொருத்தப்பாடுடைய பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சான்றாக Avadar, Terminator, Titanic  போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் அது அரிது. இருப்பினும் ஒரு சில பின்நவீனத்துவக் கூறுகளுடன் பொருந்திவரும் திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும். அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
1.இரட்டை முடிவுகளைத் தரும் '12 B '
2.புனைவுகளின் மீதான புனைவாக வெளிவந்திருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' (எம்.ஜி. ஆர். படம் அல்ல, செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்தது.)
3.தமிழ் சினிமா உலகை (கோலிவுட்), அதன் படைப்பாக்க செயல்பாட்டை பகடி செய்யும்  'தமிழ்ப்படம்', ’தமிழ்ப்படம்-2’
4.கனவு உலகைச் சித்தரிக்கும் 'நியூ'
5.ஆண்களையே நாயகர்களாக பார்த்த தமிழ் சினிமாவில் பெண்களை முன்னிலைப்படுத்தி தலைகீழாக்கம் செய்த 'சிநேகிதி'
6.வார்த்தைகளே இல்லாமல் பேசிச்செல்லும் 'பேசும்படம்'
7.ஒவியாவின் நடிப்பில் வெளிவந்துள்ள “90ML” திரைப்படம் பின்நவீன வாழ்வின் சில சமூக சிக்கல்களை தெளிவாக விவரிக்கிறது. Living together வாழ்க்கை மேலை நாடுகளில் சாதாரணம் என்றாலும் நம் தமிழ் பண்பாட்டில் ஊரிய மனங்கள் அதை ஏற்றுக்கொள்ளச் சிரமப்படுகின்றன. ஆனால் பின்நவீன சமூகம் மெல்ல அதை ஏற்கவே செய்யும், மேலும் Homo sexuality – lesbian உறவு என்பது ரோம் சாம்ராஜ்ய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. அந்த உணர்வு இயற்கையானது. எனவே அதற்குள்ளானவர்களை நாம் வேற்றுகிரகவாசி போல் ஒதுக்குவது சரியல்ல இப்பின்நவீன சமூகம் மறுபரிசீலனை செய்து அதை அவர்களின் உரிமையாக்கித் தரவேண்டும்.  மேற்படி திரைப்படத்தில் ஓவியா தோழிகளுடன் மது அருந்துவது, கஞ்சா வளிப்பது போன்ற காட்சிகள் தற்போதைய சமூகவாழ்வில் ஆங்காங்கே நடப்பதுதான். இதனால் பெண்கள்மீது கட்டமைக்கப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிற்பு  ஆட்டம் கண்டுள்ளது மறுக்கவொன்னா யதார்த்தமே.
8.பின்நிகழ் வினையை வாழும்காலத்தில் பதிவு   செய்திருக்கும் 'எந்திரன்', மற்றும் ’2.0’
9.சமூகத்திலிருந்து முரண்படும் பிறழ்மனநிலையைக் காட்டும் 'நான்கடவுள்'
10.மேலும், சினிமாவில் காட்டப்படும் சிறிய துண்டு நிகழ்வுகளில் பின்நவீனப் போக்கினைப் பல திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன. 'கிரி' படத்தில் வீரபாகுவாக வரும் வடிவேல் தன் அக்காவை ' Super Figure ' எனும் இடத்தும், 'யாரடி நீ மோகினி' படத்தில் வாசுவாக வரும் தனுசிடம் 'ஆத்துல குளிக்கும் போது குண்டி கழுவிக்கலாம் இப்ப கல்ல வச்சி துடைச்சிக்கடா' என நண்பனின் குரல் ஒலிக்கும் இடத்தும் முறையே அபத்தத்தையும், இடக்கரடக்கலையும் முன்வைத்துச் செல்வதைக் காணலாம்.
இங்ஙனம் தமிழ்ச்சூழலில் சினிமாதளத்தில் சிறு, சிறு நிகழ்வுகளாகவும் படத்தின் ஒரு கூறாகவும் பின்நவீனத்துவம் பதிவாகியுள்ளதைப் பல திரைப்படங்களில் காணலாம்.

கலை தளத்தில்:
முதலில் சிற்பக்கலையை எடுத்துக்கொள்வோம். அதில் பின்நவீனச் சிந்தனையைத் தேடி ரொம்ப தூரம் அலைய வேண்டியதில்லை. பன்முக பார்வைக்கு இடம்தரும் பிள்ளையார் சிலைகூட அதற்கொரு சான்றுதான். அது யானையா? மனிதனா? அல்லது இரண்டுமா? அதே போல் யாழியை பார்ப்போமெனில் அதை ஒரு பின்நவீன கற்பனை என்றுதான் சொல்லவேண்டும். சிங்கம், முதலை, யானை என்று கலந்துகட்டி உருவாக்கப்பட்டிருக்கும் அது பார்வையாளனிடம் பல கேள்கிகளைத் தோற்றுவிக்கிறது.
அடுத்து ஓவியக்கலையை எடுத்துக்கொண்டால் அதில் பின்நவீனத்துவம் குறித்து விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவிற்கு ஓவியத்தில் பின்நவீனக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. பின்நவீனத்துவத்தின் முன் இயங்கள் பல ஓவியத்திலிருந்து இலக்கியத்திற்கு நகர்ந்தமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. பின்நவீன ஓவியங்கள் வெறும் காட்சி பொருளாக மட்டும் இருப்பதில்லை அது பேசும் பொருள் அது அதிகார மையத்திற்கு எதிரான பல கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நல்ல பின்நவீன ஓவியம் பக்கம்பக்கமாய் எழுதி தீர்க்கவேண்டிய விசயங்களையும் நீண்ட நேரம் விவாதிக்க வேண்டிய விசயங்களையும் தன்னகத்தே எளிமையாக அடைக்கிக்கொள்கிறது. அதன்படி கீழ்க்கண்ட ஓவியங்கள் முறையே பெண்மையையும் ஒழுங்கமைவையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

 (கேலிசெய்தல்)

(ஒழுங்கின்மை)

இலக்கியத் தளத்தில்:
இன்றைய சூழ்நிலையில் சிறுகதை, கவிதை, நாவல் என்று எல்லா இலக்கியக் கூறுகளிலும் பின்நவீனச் சிந்தனைகள் இடம்பெறுவதைக் காணலாம். வடிவம், உத்தி, கற்பனை, பாடுபொருள் என்று எல்லா இலக்கிய செயற்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஒரு எடுத்துக்காட்டை மட்டும் ஞானக்கூத்தனின் கீழ்க்கண்ட கவிதையிலிருந்து பார்ப்போம். அது,
'கடற் கரையில் சில
மரங்க ளென்று நான் க
விதை எழுத நினைத்திருந்
தேன். எதையும் நி
னைத்ததும் மு
டிக்க வேண்
டும் மு
டிக்க வில்லை யென் றால் ஏ
தும் மாற்றம் ஆ
கி விடும்...”2
இக்கவிதை பேச வேண்டியக் கருத்தை வருணித்துச் செல்லாமல் வடிவத்திலையே சொல்லி விடுகிறது. இங்கு வார்த்தைகள் வெட்டி, வெட்டி துண்டாடப் பட்டிருப்பதிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு விட்டதைப் புரிந்து கொள்ள முடியும். அதையே இன்னுமொரு வாசிப்பாக, 'கடற்கரையில் சில மரங்கள்' எனும் தலைப்பில் கவிஞன் எழுதவிரும்பிய ஆசையும் துண்டாடப்பட்டுவிட்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். எனவே, ஞானக்கூத்தனின் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள சொல்லுடைப்பும், பன்முக வாசிப்பும் பின்நவீனத்துவக் கூறுகளே எனலாம்.

மேலும் ஒரு நவீனக் கவிஞன் ”நண்பேண்டா“ என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறான்;
”கொடுப்பது நீ என்றால்
விசத்தையும் குடித்துவிடுவேன்..
எடுப்பது நீ என்றால்
மனைவியையும் கொடுத்துவிடுவேன்
..”3
நட்பின் சிறப்பு குறித்து பேச எத்தனித்தால் திருவள்ளுவரை விடுத்து பேச இயலாது. அந்தளவுக்கு அவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நட்பின் ஆழ அகலங்களை ஆய்ந்து இனி யாரும் அதை மீறி கருத்து சொல்ல முடியாத அளவிற்கு திருக்குறளில் நட்பு குறித்த அதிகாரங்களைப் படைத்துள்ளார். ஆனால் ஒரு நவீன காலநட்பு அதையும் மீறி பேச வத்திருக்கிறது. நண்பனின் மனைவியை நல்ல நண்பன் ஒரு போதும் எடுத்துக்கொள்வதில்லை. எனினும் நட்புக்காக மனைவியை நண்பனுக்கு கொடுக்கும் துணிபு நமது பண்பாடுச் சூழலுக்கு இழிபு என்றாலும் அது பின்நவீனத் துணிபு.

பண்பாண்டுத் தளத்தில்:
'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது பண்பாட்டு மரபு. ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தது மரபு மீறல். பெண்களுக்கு சமஉரிமை கொடுத்தது நவீனம். பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணந்து கொண்டு வாழ்வது பின்நவீனம். (இரண்டு பின்நவீன வாதிகள் ஒரு பெண்ணுடன் வாழ்வதாக கேள்வி)
அப்பாவும் மகனும் சேர்ந்து மது அருந்துவது, சிறுசு முதல் பெருசு வரை குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சியில் அரைகுறை மஞ்சள் காட்சிகளைப் பார்ப்பது. எமகண்டத்தில் மணம் முடிப்பது, மரணத்தை கொண்டாடுவது - என்று தமிழ்ச்சூழலில் பல பண்பாட்டுக் கூறுகளும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை பின்நவீனச் சிந்தனையாக எடுத்துக்கொள்ளலாம்.

- - மகேஷ் பொன்

சான்றெண் விளக்கக் குறிப்பு:

1.    அயன்ஆல்- பின்நவீனத்துவம் குறித்த என்தேடலில் கண்டவை- கட்டுரை (இணையம்)
2.    மு.சுந்திரமுத்து- படைப்புக்கலை,  - ப. 88
3.    மகேஷ் பொன் –- நண்பேண்டா - கவிதை- http://www.divyaeesan.blogspot.com/










கருத்துகள் இல்லை: