30 நவம்பர் 2023

சிறு வேண்டுதல்

தொடையில் பிராண்டல்களுடன்
இரத்தம் சொட்ட சொட்ட வந்த
புள்ளிமான்ஒன்று
எங்கள் புறக்கடை விளையில்
மூன்று நாட்களுக்கு மேல்
தஞ்சம் அடைந்துள்ளது
நானும் என் நாயும்
அது பத்திரமாக இருக்கிறதா என்று
இன்றும் பார்த்துவந்தோம்

மாடம் ஏறி கோழி திருடும்
ஒரு வறிய சிறுத்தை
எங்கள் வீடண்டியே உலவும்
அதன் பம்மிய  வருகையை
அதனை விரட்டியடிக்கும் லாவகத்தை
என் நாய் நன்கு அறியும்

”அந்த சிறுத்தையின் கண்களில்
இந்த மான் படாதபடி
நம்மை நம்பி வந்த விருந்தினரை
காத்துக்கொள்! காத்துக்கொள்!!” என்று
என் நாயின் காதில் சொன்னேன்

எனது பரிதவிப்பு
என் நாய்க்கு புரிந்திருக்க வேண்டும்
அதனால்தான்
அந்த மானைப் பார்த்து குரைப்பதில்லை
அடிக்கடி போய் போய்
அதன் இருப்பை உறுதிசெய்து வருகிறது

ஆனாலும் எனது நாய்
நல்லதொரு வேட்டை நாய்
அது முன்பு மானையும் வேட்டையாடியிருக்கிறது

என் நாய்
துரத்தத் தொடங்கும் போது
அந்த மான்
வேலி தாண்டி பாய்ந்தோடும் அளவுக்கு
அதன் கால்கள் பலப்பட வேண்டும்…

-  திவ்யா ஈசன்


இறுகிளியின் கருணை

இந்த வாழ்க்கை
என்மீது மட்டும் ஏன்
சுமத்திக்கொண்டே இருக்கிறது?
பாரம் தாங்காமல்
அச்சாணி உடைந்துவிடும் அளவுக்கு
வண்டி தடுமாறி தடுமாறிதான்
 நகர்ந்துக்கொண்டிருக்கிறது

இன்று  நான்
ஒரு ஆசுவாசத்திற்காக
வீட்டின் புறக்கடையில் உள்ள
சிற்றோடையின் நடுவில் தனித்திருக்கும்
ஒரு  பாறையில் ஏறி அமர்ந்தேன்
இங்கு ஆட்களே இல்லை
நீர் சலசலத்துப் போனது
கல்லங்காரி மீன்கள் அப்பியிருந்தன
வானம் வெளிச்சமாய் இருந்தது
எதிரே பெரும்  மலை தெரிந்தது
காற்றில் மரங்கள் சடசடத்தது
வனத்தில் ஏதோ ரீங்காரம் கேட்டது
பக்கத்தில் பலா மணம் வீசியது
ஆனாலும்
கரடி வருவதுகுறித்து
பயமில்லாமல்தான் இருந்தேன்

ஒர் இறுகிளி பெற்றம்
கீச்சிட்டப்படியே
என்னைக் கடந்து போனது
சிட்டுக்குருவியினும் சிறிதாய் இருக்கும்
அந்த இறுகிளியில் ஒன்றுதான்
என் பாரத்தில் இருந்து
110கிலோ மூட்டையை த் தூக்கிப் போனது

நான் வீடு திரும்பியப் போது
அத்தனை லேசாக இருந்தேன்

- திவ்யா ஈசன்


விபத்து இல்லுவாழே இல்லாகி

முதலில் ஒருவர்
அப்புறம்
வரிசையாக அவரது வகையறாக்கள்
 
முதலில் ஒரு வாகனத்தில்
விபத்துக்குள்ளாகி
துடிதுடித்து இறந்து கிடக்கும்
செத்த நாயின் மீது
பிறகு
சாலையில் போகும்
பல்வேறு வாகனங்கள்
வரிசையாக ஏறி இறங்கும்...
 
இத்தகைய விபத்துக்கள்
யார் வாழ்க்கையிலும் நிகழலாம்
அந்த முதல் ஒருவர்
மனைவி
அல்லது
வேறு யாராகவும் இருக்கலாம்...
 
- மகேஷ் பொன்

 

எப்படி பொருந்துவேன்

நீ
தாய்வழிச் சமூகத்தில்
பிறந்தவள்
அவன்
தந்தைவழிச் சமூகத்தில்
 
நீ
மரபைப் பேணும் கூட்டத்தில்
வளர்ந்தவள்
அவன்
மரபை உடைக்கும் கூட்டத்தில்
 
நீ
நிலம் சார் தற்சார்பில்
வாழ்பவள்
அவன்
நிலம் சாரா அயற்சார்பில்
 
நமது மொழி
அவர்களுடையது போல் இல்லை
நமது தெய்வம்
அவர்களுடையது போல் இல்லை
நமது நம்பிக்கை
அவர்களுடையது போல் இல்லை
நமது பண்பாடு
அவர்களுடையது போல் இல்லை
 
நமது உடை முறை
நமது உணவு முறை
நமது உறவு முறை
அவர்களிலிருந்து மாறுபட்டது இல்லையா
 
கொக்கரை நாதமும்
பறை நாதமும்
எப்படி பொருந்தும் என்கிறாய்?
 
நம் அம்மையை விட
அல்லது என்னை விட
அவன்
ஒரு கைப்பிடி அளவு
கூடுதலாக அன்பு செய்வானெனில்
நீ போ! போய் பொருந்திக்கொள்
 
இன்னமும்
இன உணர்விலிருந்து விடுபடாத
என்னால் முடியவே முடியாது அது
ஒருவேளை முடிந்தால்
பின்னாளில் வந்து பொருந்திக்கொள்கிறேன்
 
ஆனாலும்
அவனுக்கு
நம் வீட்டு வாயிலில்
நிச்சயம் தலை தட்டும் என்கிறேன்..
 
- மகேஷ் பொன்
 

 
 
 

திங்கட்கிழமையின் நுகக்கால்

போக வேண்டும் என்பது
குட்ட மாடு
போக வேண்டாம் என்பது
நெட்ட மாடு
இரண்டு சிந்தைகளையும்
வண்டியில் பூட்டினால்
ஒன்று முன் இழுக்க
ஒன்று பின் இழுக்க
நுகக்கால் ஏறிஇறங்கி கிடக்க
தார்க்கம்பு போட்டபடியே
என்னை வேலைக்கு ஓட்டிப்போகிறேன்
 
- மகேஷ் பொன்
 


பிடித்தவைகளின் முன்

நான் ஒரு வாழ்க்கை வாழ்கிறேன்
அதை பிடித்து வாழவில்லை…
நான் ஒரு வேலை செய்கிறேன்
அதையும் பிடித்து செய்யவில்லை…
 
எனக்கு பிடித்த யாவற்றையும்
இங்ஙம் புகைத்து தள்ளுவதைத் தவிர
வேறு வழியில்லை….
இனி இந்த சிகரட்டைத் தவிர
என்னிடம் இழப்பதற்கும் ஒன்றுமில்லை..
 
- மகேஷ் பொன்


 

Ever Green Ilayaraja

இலைகள் உதிர்ந்து சருகாகும்
நெடுங்கோடையில்
தடதடவென ஊன்றி பெய்யும்
மழை கொணரும் வசந்தம் போன்றது
வறண்ட இந்த வாழ்க்கையில்
ராஜாவின் பாடல் கொணரும் பச்சையம்
 
- மகேஷ் பொன்

 

போர்த் திட்டம்

அதி விரைவில்
உனக்கே உனக்கான
ஒரு ராஜியம் உருவாகும்
அங்கு
நீதான் மகாராணி
உன் தோரணையின் முன்
யாவரும் சாமரம் வீசுவார்கள்...
 
இப்போது
நாம் கொஞ்சம் வாள் வீச வேண்டும்

- மகேஷ் பொன்


25 நவம்பர் 2023

தலைக்கு மேல் வளர்ந்த மருமகள்

என் மருமகள்
எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறாள்
தெரியுமா?
 
எனது தாவறான முடிவை
திருத்தியமைக்கும் அளவுக்கு
 
என்னிடம் கூடுதலாக இருக்கும்
இருபது வருட அனுபவத்தை
மூட்டைக் கட்டி
பரணில் போடும் அளவுக்கு
 
இனி
ஏன்
ஏதற்கு
என்று கேள்வி கேட்காமல்
அவள்
பின்னாடியே போகும் அளவுக்கு
 
அவள் நிமித்தம்
என் அக்காவிடம்
பரிந்துப் பேசும் அளவுக்கு
என் மச்சானிடம்
சண்டையிடும் அளவுக்கு
 
அவள் எழுதும் கவிதையில்
நான் பிழை காணாத அளவுக்கு
 
- மகேஷ் பொன்

 

நேர்மை 140

சார்! ஒரு பத்து ரூபாய்
கம்மியா இருக்கு கிடைக்குமா?
 
அண்ணே! ஒரு பத்து ரூபாய்
இருக்குமா?
 
தம்பி! தம்பி! ஒரு பத்து ரூபாய்
மட்டும்தான் தேவைப்படுது
 
பாரியின் பறம்பு மலையிலிருந்து
நேராக பாருக்குள் வருபவர்கள்
அவன் கஷ்டம் உணர்ந்து
கடைசிப் பத்து ரூபாயைக்
கொடுக்கத் தொடங்குகிறார்கள்
 
அந்த கடைசிப் பத்து ரூபாய்தான்
முதல் பத்து ரூபாய்
அந்த கடைசிப் பத்து ரூபாய்தான்
இரண்டாம் பத்து ரூபாய்
அந்த கடைசிப் பத்து ரூபாய்தான்
மூன்றாம் பத்து ரூபாய்
 
அந்த கடைசிப் பத்து ரூபாயை
பதின்மூன்று முறை வாங்கியவன்
பதினான்காம் முறை
’கடைசி பத்து ரூபாய்’ என யாசித்தான்
இப்போது
உண்மையில் அது 
கடைசி பத்து ரூபாய்தான்….
 
நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
”140ல ஒன்னு ”
என கேட்டு வாங்கியவன்
போயே போய்விட்டான்
 தன்மானம்
டம்ளருக்கு என்ன செய்யும்
தண்ணீர்க்கு என்ன செய்யும்
சைடு டிஸ்க்கு என்ன செய்யும்
 
- மகேஷ் பொன் 


மூன்று நம்பிக்கைகள்

என்னிடம்
மூன்று நம்பிக்கைகள் இருந்தன
 
ஒன்றை பேசச் செய்தேன்
ஒன்றை படிக்கச் செய்தேன்
ஒன்றை எழுதச் செய்தேன்
 
முதல் ஒன்று
அப்படிதான் பேசியது
ஆனால் மேடை ஏறுவதற்குள்
நேற்று அது
பிள்ளை பிடிப்பவன்
பின்னால் போய்விட்டது…
 
இரண்டாவது ஒன்று
பெரும் சிலுவையையும்
நிலுவையையும்
உடைத்துவிட்டு
இன்று அது
தேர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது…
 
மூன்றாவது ஒன்று
பேனாவால்
மண்டையை சொரிந்தபடி இருக்கிறது
நாளை அது
ஜெயிப்பேன் என்கிறது
 
பார்ப்போம்
தோற்றால்
அந்த நம்பிக்கையின் பெயர் போபியா
வென்றால்
அந்த நம்பிக்கையின் பெயர் சோபியா
 
- மகேஷ் பொன்