14 ஏப்ரல் 2020

உயிருடன்தான் இருக்கிறேன்


அவன் யாரினும் நல்லவன்தான்
குற்றம் செய்வது குறித்து
நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டான்
ஆனாலும் செய்துவிட்டான்
கொலையினும் கொடுரக் குற்றம் அது

ஒரு கோவில் கொடைவிழாவில்
பால்யம் மாறாத சிறுமியிடம்
நோட்டமிட்டு நோட்டமிட்டு வழிப்பறித்தான்

ஒருவள் சேர்த்து வைத்திருந்த
அக்காவின் எண்ணற்ற பரிசுகள்
அம்மாவின் விலைமதிப்பற்ற நகைகள்
அப்பாவின் கடைசி சொத்து
அன்பான அவைகளைக் கொள்ளையடித்தான்

மோகக் கண்களை முள்ளெடுத்து குத்தினான்
வாலிப்பான கண்ணத்தில் திராவகத்தை வீசினான்
கோவைப்பழ உதட்டின் சிவப்பை சுரண்டினான்
நீண்ட கார்கூந்தலை ஒட்ட கத்தரித்தான்
எடுப்பான கொங்கையின் திமிரை சிதைத்தான்
மெல்லுடல் எங்கும் நகத்தால் பிராண்டினான்

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல்
இதுவரை எழு கொலைகள் செய்திருக்கிறான்
இக்கொலையை மிக வலிமிக்கதாய் செய்தான்
இதோ இதோ என நம்பவைத்து கழுத்தறுத்து

சின்ன பெண்ணின் நலன் கருதி செய்த   
கருணைக் கொலைமுயற்சிதான் அது
யாரும் சாகவில்லையே என்கிறான்
நம்பும்படியாகவா இருக்கிறது இது

குற்றங்கள் அதிகரிக்கவே சிறைப்பட்டான்
எப்போதும் ஆளோடு இருந்தாலும்
அரவமில்லா தனிமை அது
கொலையுண்டவள் கனவில் வந்ததற்காக
அவன் மார்பில் உதை விழுகிறது
அது ஒரு இருட்டறை என்பதால்
இடம் மாறிய அடியில் செவுல் சிவக்கிறது
எவர்கிரின் பாடல்களை முனுமுனுத்ததால்
அவன் முன்பல் உடைக்கப்பட்டது
தான் திருந்திவிட்டதாக சொல்லிய போது
கட்டிவைத்து வதை செய்யப்பட்டிருக்கிறான்

பாதாள கிணற்றிலிருந்து எழுப்பும் சத்தம்
வெளியில் யாருக்குக் கேட்கும்
தண்ணீரில் மீன் வடிக்கும் கண்ணீர்
கரையில் யாருக்குத் தெரியும்

மணி அடித்தால் சோறு மட்டும்தான்
மற்றப்படி சிறை வாழ்க்கை அவனை
ஒவ்வொருநாளும் ஊமை குத்தாக குத்துகிறது
பாவம் விட்டு விடுங்கள் அவனை
என் காதலைதான் கொலை செய்தான்
கொலையுண்ட நான் உயிருடன்தான் இருக்கிறேன்
 
- மகேஷ் பொன்



கருத்துகள் இல்லை: