14 ஜனவரி 2021

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!


வெடிப்புகள் விழுந்த போது
மழைக்கு ஈரம் தப்பியதால்
புழுதிதான் பறந்தது…
கதிர்கள் கவிழ்ந்த போது
மழைக்கு பருவம் தப்பியதால்
வெள்ளாமை மிதக்கிறது…
இன்றைய மழை லயிக்கவில்லை
ஆயினும் சம்சாரி நான்
விற்றால் நூறு
வாங்கினால் ஆயிரம்
இந்த கணக்கில் நோக்கினால்
மழை பெரிதாயொன்றும் பாதிக்கவில்லை
அடுத்தப் பூவுக்கு ஆதாயம்தான்!
 
- மகேஷ் பொன் 



உடன்போக்கு ஒன்பது; வீடுதிரும்புதல்


காதலிகளுக்கு
மதுவை கூடுதலாய் குடித்தவன்
தங்கைகளுக்கு
நலம் வாழ்கவென வாழ்த்தியவன்
மருமகளுக்கு
நல்ல மாமாவாக மாறியவன்
மனைவி ஓடிப்போகையில்
துன்பம் தொலைந்ததென விட்டுவிடுகிறார்கள்
மகள் வரிசை வந்தபோது
அவசரமாக பேருந்தில் ஏறும்
அந்த கருப்பு சுடிதார் போட்டவள்
அவளென்றே மூளை மங்குகிறது
பதட்டம் பற்றிக்கொள்கிறது
இதயத்தின் படபடப்பு வெளியில் கேட்கிறது
மூன்றாம் நாள் பசி மறந்தேவிட்டது
தேடலில் தொண்டைக் கவ்வுகிறது
யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை
தூக்கம் தொலைந்து போனது
கண்ணீர் காலியான பின்னும் அழுகை வருகிறது
ஆனாலும் முன்னவர்களுக்கு வந்தது போல்
உன் மீது கோபமே வரவில்லை…
சட்டென்று போகட்டுமென தூக்கி எறிய
பாவம் எனக்கில்லை நெஞ்சுரம்
திடீரென்று கையை உதறிவிட்டுப் போக
உனக்கு இருந்திருக்கிறது அது…
உடன்போக்கு
எப்போதுமே சுரத்திடைதான் நிகழ்கிறது
நீ நீ
முள்ளின் மீது நடந்து இரத்தம் சிந்துவாய்
சீக்கிரம் வீடு திரும்பிவிடு
என்னிலிருந்து தொடங்கும் உன் பாதையில்
இன்னமும்
பூக்களைதான் தூவிக்கொண்டிருக்கிறேன்…
றெக்கை முளக்காத இளங்குருவி
பறக்க முயன்று
கூட்டிலிருந்து கீழே விழுந்தால்
அங்கலாயித்து பறப்பதும்
அரற்றி விம்முவதும்
வலியின் வலியும் யாருக்கென
உனக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லைதான்
தாயின் கதகதப்பு அற்றுவிட்டதே
குளிர் ஜீரம் வரவில்லையா உனக்கு
இதோ நேரம் இருட்டிவிட்டதே
தெரு நாய்களிடம் பயமில்லையா உனக்கு…
இத்தனை நாள் இத்தனை நாள்
நான் பேணி வளர்த்த அன்பில்
எங்ஙனம் எங்ஙனம்
ஒரு நொடியில் கரியைப் பூசினாய்
ஆனாலும் நீ இல்லாத வீடு வீடில்லை
என் பேரன்பே நீ நீ வந்துவிடு…
நாற்கவிராசநம்பி விட்டுவிட்டார்
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
ஒன்பது வீடுதிரும்புதல்!
பத்து இழுத்துவருதல்!!
பதினொன்று கொன்றொழித்தலும் உண்டு…
 
- மகேஷ் பொன் 



இப்படிக்கு காலம்சென்ற நாயகி


எனக்கு வேண்டுமென ஆராயாமல்
உனக்கு வேண்டாமென வழித்தப்பியதால்
உன்னை விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன்…
ஏறி வந்தேன் அறிவினில்
இறங்கி வந்தாய் அன்பினில்
இப்போது வயது சமன்கொண்டது
பெருந்தினை பொருந்திக்கொண்டது…
சித்தம் கலங்கிய நிலையில்
எனது வழிகளும் மறந்துவிட்டன
ஏதொவொரு வழியில்
எனக்கென வாய்த்த வழிகளும்
உன்னையே வந்து சேர்கின்றன…
எண்ணம் எல்லாம் பேருந்தேறி
உன்னை நோக்கியே வருகின்றன…
அன்பு அண்ணாச்சி கடையில்கூட கிடைக்கிறது
அரண் நீலநிற சட்டையில் ஆங்காங்கே நிற்கிறது
அத்தனைக்கும் கூகுல் எனக்காகவும் சுற்றுகிறது
ஆனாலும்
நின் யோக்கியதை அதையேதான் செய்கிறது…
வேறொரு அன்பில்
வேறொரு அழகில்
வேறொரு ஈர்ப்பில்
வேறொரு வாய்ப்பில்
எப்போதும் உடன்பாடில்லை எனக்கு…
இப்போதும் தடம் மாறாமல்
ஒரு துறவியைப் போல் நிதானித்திருக்கிறேன்
இத்தவத்தில் பொங்கும் ஒருவழித் தவிப்பை
நீ! நீயேதான் வழிநெடுக வழியவிடுகிறாய்…
என் கோப்பையின் மது
உன் குடுவையில் இருக்கிறது
நானும் உன்னை மட்டுமே யாசிக்கிறேன்
நீ இடாமல் என் பாத்திரமும் நிரம்பாது…
டேய்! புரியுதாடா லெளகிகி!!

- திவ்யா ஈசன்


28 கி.மீ. வாழ்க்கை


இன்றையப் பொழுதில் குளிர்ச்சியில்லை
புழுக்கம் மின்விசிறியைச் சுற்றவிடும்
பாவம் பரபரப்பு என்ன செய்யும்…
வீடு குரைக்கும் நாய்
அலுவலகம் கடிக்கும் நாய்
இரண்டுக்கும் இடையில்
ராஜாவின் ஐந்து பாடல்கள் தூரம்தான்…
ஓட்டுநரின் மிதமான வேகம்
சன்னலோர சாரல் காற்று
யுவதியின் தடுமாறும் விழிகள்
பயணம் அப்படியே நீளக்கூடாதாவென
ஒரு பெருமூச்சு விடுகையில்
விசில் ஓங்கி ஓலிக்கிறது
இறக்கத்தில் தள்ளிவிடப்படுகிறேன்…
ஏற்றப்படுகிறவன் முகத்திலும் காயமிருக்கிறது
சிறந்த ஒன்றைத் தேர்க
வொன்று வட்டமான வாழ்க்கை
மற்றொன்று மட்டமான வாழ்க்கை…
 
- மகேஷ் பொன் 







உன்னதமான வாழ்க்கை


நீ செய்த துரோகத்தில்
என்ன நீதி இருக்கிறது
நீ செய்த குற்றத்தில்
என்ன நியாயம் இருக்கிறது
நீ செய்த புறக்கணிப்பில்
என்ன நேர்மை இருக்கிறது
நீ செய்த பாவத்தில்
என்ன பரிசுத்தம் இருக்கிறது

நான் சிறுமுகை என்றாலும்
உன் நறுமுகை அல்லவா
நீதானே பரித்திருக்க வேண்டும்
நீதானே முகர்ந்திருக்க வேண்டும்
நீதானே சூடியிருக்க வேண்டும்
விரியும் போதே
கரியும் போதானேன் பார்

நான் இளமகள் என்றாலும்
உன் குலமகள் அல்லவா
நீதானே பூவைத்திருக்க வேண்டும்
நீதானே பூஜித்திருக்க வேண்டும்
நீதானே புணர்ந்திருக்க வேண்டும்
வாழும் முன்னே
வீழும் முன்னானேன் பார்

நீ என்னை விட்டுப்போனது
பெரும் துரோகம்
நீ என்னை விட்டுப்போனது
பெரும் குற்றம்
நீ என்னை விட்டுப்போனது
பெரும் புறக்கணிப்பு
நீ என்னை விட்டுப்போனது
பெரும் பாவம்

நீ விட்டுப்போன இடத்தில்
அப்படியே கெட்டுப்போய் நிற்கிறது
நீ எனக்கென விட்டுப்போன
அந்த உன்னதமான வாழ்க்கை
 
- திவ்யா ஈசன்