17 செப்டம்பர் 2016

அர்த்தநாரீஸ்வரம்

நான்
நான் மட்டுமல்ல 
நீயும் நான்தான்...
நீ
நீ மட்டுமல்ல 
நானும் நீதான்...


13 மே 2016

பெருந்திணை


மனது மீறிவிட்டாலும்
வயது எறிவிட்டதும் உண்மைதான்… 
விற்ற பொருளுக்கு
விலைவைப்பவளாய் நீ
வீங்கிய கைகளுக்கு
வளையிடுபவனாய் நான்
அறுவடை காலத்தில் பொழியும்
பே மழையாய் நீ…
சிறுபடை தாக்கத்தில் அழியும்
மா ராஜ்யமாய் நான்…
பார்வைத் திறமும்
வார்த்தை லயமும்
பாலினக் கவர்ச்சியும்
ஒத்த இணையாக்கியது…
அன்பின் வளமையும்
இலக்கிய புலமையும்
சோசியலிச சாரமும்
ஈடற்ற இணையாக்கியது…
இருப்பினும் என் பேரன்பே
விருப்பு வெறுப்பற்ற வெற்று மனதுடன்
இருவரும் பிரிந்தாக வேண்டும்.…
உனக்கு காதலிக்க வயதில்லை
எனக்கு காதலிக்கும் வயதில்லை..
முதலாவதாய் காதலிப்பவள் நீ
நிறைய காதலித்தவன் நான்…
உனது வேகம் மீதமிஞ்சுவதால்
எனது விவேகம் நிலைகுலைகிறது…
வேண்டாமென்றாலும்
வெட்ட வெட்ட வளரும் நகத்தைப் போல்
வேண்டுமென்றே
முட்ட முட்ட வளர்கிறது காதல்…
நீ என்னை காதலிக்க
ஓராயிரம் காரணம் இருக்கலாம்
நான் உன்னை மறுத்துரைக்க
ஒரே காரணம்தான் -
நானும் உன்னை காதலிக்கிறேன்…

06 ஏப்ரல் 2016

நான் ஏன் ஆர்யா ரசிகன்

வாசலிலே ஒரு வெண்ணிலா அமலா
மந்திர புன்னகை நதியா
அத்த மக ரத்தினமே ரஞ்சிதா
உள்ளத்தை அள்ளித்தா ரம்பா
வசிகரா சினேகா
குட்டி ஸ்ரேயா
கல்லூரி தமன்னா
மைனா அமலாபால்
குட்டிபுலி லட்சுமிமேனன்
தி.மு. வரை ரசிகன்தான் நான்!

”பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
எம்.ஜி.ஆர்
சிவாஜி
விஸ்வநாதன் ராமமூர்த்தி
இவர்கள் கலைத்துறை சாதனையாளர்களா?
பாலாதானே இயக்குநர்
யாருங்க இந்த பாரதிராஜா
குற்றபரம்பரையில் ஆர்யாவை நடிக்கவைப்பாரா?
இங்ஙனம் வினவுவதால்
நான் விவாதிக்க முயல்வேன்
அவளுக்கு விளக்கம்கூடத் தேவைப்படாது.
தி.பி. யிலும் ரசிகன்தான் நான்!

இளையராஜா சண்டை இழுத்துவிடுகிறார்…
புலமைப்பித்தன் புலமை இழந்துவிட்டார்…
கவுண்டமணி கவுந்துகொண்டே கடந்துபோகிறார்…
சின்னக்குயில் சித்ராவும் பி.சுசிலாவும்
ஒரு நிமிடத்திற்குமேல் பாடமாட்டார்கள்…

ஆர்யா படம் பார்த்து
ஆர்யா பாடல் கேட்டு
ஆர்யா வசனத்துக்கு கைத்தட்டி
ஆர்யா நகைச்சுவைக்கு சிரித்து
ஆர்யா சண்டைக்கு வெறித்து
ஆர்யா காதலுக்கு உருகி
பழகிவிட்டது எனக்கு…

நானும் ஆர்யா ரசிகன்தான் என்றாலும்
ஏற்கமுடியாமல் சூர்யாவை பரிந்துரை செய்கிறாள்.
நான் ஆர்யாவுக்காக படம் பார்த்தாலும்
என்னையும் நஸ்ரியாவையும் இணைத்துப் பேசுகிறாள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை 
நான் நிரந்தரமாக ஆர்யா ரசிகன்தான்
என் மனைவிக்கு மட்டும்.
மற்றவர்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன்
சற்றுமுன்பு நான் சமந்தா ரசிகன்!
இப்போது நான் நயன்தாரா ரசிகன்!!







தொடர்பு எல்லைக்கு வெளியே

மனைவிக்கு பிடித்த
சரவண காந்தியை
கணவனுக்கும் பிடித்திருக்கிறது…
கணவனுக்கு பிடித்த
நித்ய ஜெயந்தியை
மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை…
கணவன் மீதுள்ள நம்பிக்கை
பெண்கள்  மீதுள்ள நம்பிக்கை
அவநம்பிக்கை எதுவெனத் தெரியாது.
”பண கஷ்டத்தில் உதவுகிற
ஒரு நண்பன் இருக்கலாம்…
என்ன கஷ்டத்தில் உதவினாலும்
ஒரு நண்பியும் இருக்கக் கூடாது.”
ஆணைக்கினங்க
உடன் ஊர் சுற்றிய இளைய வட்டமும்
காதல் பேசிய காளையர் வட்டமும்
கவிதை பேசிய இலக்கிய வட்டமும்
கம்யூனிசம் பேசிய புரட்சி வட்டமும்
தொடர்பு எல்லைக்கு வெளியிலிருக்கும் -
கணவனின் நட்பு வட்டமாம்!