28 மார்ச் 2021

அன்பின் சுவை


பேசிக்கொண்டே வருகிறோம்

கல்லூரி நிறுத்தம் வந்துவிட

சகப் பயணிகள் பார்க்க

உடன் பயில்வோர் வெறிக்க

மிகையன்பு மட்டும்

என் கீழ்உதட்டை கடித்து இழுக்கிறது

அக்கா சாயலில் நான் இருக்க

என் சாயலில் அவள் இருக்க

இந்த ஒரே ஒரு முத்தத்தில்

அன்பின் சுவை ஆயிரம் இருக்கிறது

முத்தம் காமத்தில் சேராது என்றுணர

அவளுக்கு அடுத்தநிறுத்தம்

எனக்கோ முப்பத்தாறு ஆண்டுகள்

 

- மகேஷ் பொன்



10 மார்ச் 2021

ஒப்பந்தத்திற்கு முன் படிக்கப்பட்டவை


நான் ஒரு முதுநிலை பட்டதாரி
தேசியக் கபாடி வீராங்கனை
உடற்கல்வி ஆசிரியர் ஆவேன்
இந்தியச் சிவப்பு
நல்ல உயரம்
மருளும் கண்கள்
நீண்ட கூந்தல்
கள்ளூரும் உதடு
மென்னகை ததும்பும் முகம்
திரும்பி பார்க்கும் அழகு
ஐம்பது சவரன் தேறும்
தங்கை நயன்தாரா சாயலில் இருப்பாள்
உன்னைப் போலவே எனக்கும்
பார்த்ததும் பிடித்துவிட்டது…
உனது கடந்தகாலம் பற்றி
ஒருபோதும் கேட்கப்போவதில்லை
நீயாக சொல்வாய் எனில்
என்னிடம் எதிர்வினைகளுமில்லை
இருந்தாலும் நீ நோண்டுவாய்;
பதினாறு நிமிடங்கள்
பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன்…
நாற்பத்து இரண்டு நாட்கள்
விடாமல் காதலித்திருக்கிறேன்…
இரண்டு மாதங்கள்
கற்பத்தை கலைத்திருக்கிறேன்…
மணமான ஒருவன் நல்லானாய் இருக்கிறான்...
இப்போது
பீரேறிய அலமாரியைச் சுத்தம் செய்யவேண்டும்
கைப்பேசியை மறுபதிப்புச் செய்ய வேண்டும்
எனதொரே நல்லாளுக்கு புரியவைக்க வேண்டும்
காபி சங்கிலியிலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்
அம்மாவிடம் சொல்லப்பட்ட பொய்கள் குறித்து
அம்மாவுக்கே தெரியாது; அதை விட்டுவிடலாம்.
அவர் அவர் வாழ்க்கையை
அவர் அவர் வாழ்ந்துகொள்ளலாம்
நீ என்ன சொல்கிறாய் ?
 
- திவ்யா ஈசன் 



என் நிலம்! என் உரிமை!!


வரப்பில் வாங்கும் விலைக்கும்
சந்தையில் விற்கும் விலைக்கும்
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்
மகசூல் பெரிதாய் சுரண்டப்படுகிறது
ஆனாலும்
நிலத்தின் மீதான உரிமை இருக்கிறது…
இந்த பத்துக்காட்டிற்குள்
வெள்ளம் வந்தது
வறட்சி வந்தது
புயல் வந்தது
கொல்லை நோய் வந்தது
வெட்டுக்கிளிகள் வந்தன
நெகிழிகள் வந்தன
குப்பிகள் வந்தன
பெருச்சாலிகள் வந்தன
ஆனாலும்
விளைச்சலைக் கணக்குப் பார்க்கையில்
”அடுத்தப் பூவில் பார்த்துக்கொள்ளலாம்” என்ற
நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கிறது…
டிராக்டர்களைத் தந்தீர்
கலப்பைகளைக் காணவில்லை
கால்நடைகளைக் காணவில்லை
டை அமோனியம் பாஸ்பேட் தந்தீர்
தொழுவங்களைக் காணவில்லை
புழுக்களைக் காணவில்லை
கிளைபோசட் தந்தீர்
தழைகளைக் காணவில்லை
நுண்ணுயிர்களைக் காணவில்லை
காப்பர் டை அசிட்டோ ஆர்சினைட் தந்தீர்
நீர்ப்பாம்புகளைக் காணவில்லை
ஊமச்சிகளைக் காணவில்லை
குறுங்கால ஹைப்ரேட் தந்தீர்
நெடுங்கால வித்துகளைக் காணவில்லை
சரிவிகித சத்துகளைக் காணவில்லை
ஸ்மார்ட் சிட்டிகள் தந்தீர்
பாசனக் குளங்களைக் காணவில்லை
மழை கால்வாய்களைக் காணவில்லை
ஆனாலும்
எங்களிடம் விவசாயம் இருக்கிறது…
அந்த உரிமைப்ப்பட்ட நிலத்தின் மீது
இப்போது குழி வெட்டுகிறீர்கள்…
அந்த மிச்சமிருக்கும் நம்பிக்கையின் மீது
இப்போது ஆணி அடிக்கிறீர்கள்…
ஆனாலும்
எங்களிடம் விவசாயத்தை இருத்துவோம்
இரக்கமற்ற உங்களுக்கும்
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
மூன்று வேளை உணவளிக்கும் பொருட்டு….

- மகேஷ் பொன்


மெகா ரப்பர்


முதல் நாயகியின் தங்கை நீ
பால்யம் மாறாமல் இருந்தாய்
அன்புள்ள மாமாவுக்கு
மருமகளாக இருந்தாய்
உரிமைகள் வகுத்துக்கொண்டு
நல்ல மகளாக இருந்தாய்
ங்க’வை தொலைத்தப்பின்
தோழியாக இருந்தாய்
ச்சி.. ப! ச்சி.. ப! என்ற போது
என் ஒரே செல்லமாக இருந்தாய்
அந்த மகாலெட்சுமி ஒடிப்போகையில்
நீ மட்டும் மிச்சம் இருந்தாய்
உன்னை காதலிக்க முடியாது
ஆனாலும் என் அத்தனை காதலையும்
நீயே எடுத்துக்கொண்டாய்
உன் புறலட்சணம்
என் மூன்றாவது தங்கையுடையது
உன் அகலட்சணம்
என் அருவ அன்னையுடையது
உன்னை தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன்
நானும் சிறுவனாகி விளையாடியிருக்கிறேன்
தவறுகளைத் திருத்தியிருக்கிறேன்
குற்றங்களைக் கண்டித்திருக்கிறேன்
உன் ருதுகாலத்தை கையாண்டிருக்கிறேன்
நீச்சல் பழக்கியிருக்கிறேன்
சைக்கிள் பழக்கியிருக்கிறேன்
பயணம் பழக்கியிருக்கிறேன்
புத்தகம் பழக்கியிருக்கிறேன்
நீ கைப்பிடித்து நடக்க வேண்டியதில்லை
உன்னை பறக்காட்டியிருக்கிறேன்
இப்போதும் இச்சையின்றி முத்தமிடுகிறாய்
எப்போது வளர்ந்தாயென அறியேன்
சுயம் கொண்டாய்
தனியே நடக்கிறாய்
அரசியல் பேசுகிறாய்
இலக்கியம் ரசிக்கிறாய்
கவிதை எழுதுகிறாய்
தீர்க்கமாக முடிவெடுக்கிறாய்
குடும்பத்தின் ஒரு தூண் ஆகிவிட்டாய்
உனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறேன்
இப்போது
சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிறாய்
மது நெடியைக் கடிந்துகொள்கிறாய்
அக்காவுக்கு துரோகமிளைத்தேன் என்கிறாய்
அன்பை கூட்டித்தரச் சொல்கிறாய்
அலுவலகத்திற்கு விடுப்பெழுத வைக்கிறாய்
எனது பதினெட்டு வருடங்களை அழித்துவிடும்
ஒரு மெகா ரப்பரை இழுத்து வருகிறாய்
மேலும்
இன்றைய உனது ஸ்பரிசத்தில் விரகமேறியிருக்கிறது...
நீ
என்னைக் கட்டிக்கொள்ளும்
ஆசையைத் தெரிவிக்கையில்
ஒரு மனைவியும்
இரு குழந்தைகளும்
என்னை கட்டிவைத்து
அடித்துக்கொண்டிருகிறார்கள்....
 
- மகேஷ் பொன்