25 நவம்பர் 2014

உணவக யாசகன் அல்லது உணவுக்கே யாசகன்

சோற்றில் உப்பில்லை…
குழம்பில் காரமில்லை…
அவியலில் ருசியில்லை…
என சொல்ல கேட்க்கையில்
எனக்கு கோபம் வருகிறது-
ஏனெனில்
எனக்கான உணவில்
எப்போதுமே அன்பில்லை!

அரை வயிற்றுக்கு உண்பவனை
யோகி என்பார்கள்…
குறை வயிற்றுக்கு உண்ணும் நான்
யோகியோ ஞானியோ அல்லன்-
ஏனெனில்
பெரும் பசியோடும்
குறும் பணத்தோடும்
நாளும் வயிறு நிரப்பும்
ஓர் உணவக யாசகன் நான்!

மிச்சம் வைத்த எச்சில் உணவை
கூச்சமின்றி உண்பதால்
சிலநேரம் நாயினும் கீழாகி போகிறேன்
ஏனெனில்
ஏழு நாட்களும் எலும்புக்கறி…
பால், முட்டை, பிஸ்கட்… -
என உணவுமுறை இருக்கிறது
என் உறவினர் வீட்டு நாய்களுக்கு!



18 நவம்பர் 2014

படித்தல்

 முக சவரம் செய்தலையும்
முடி வெட்டுதலையும்
வீண் செலவென விட்டுவிட்டு
புத்தகங்கள் வாங்குபவன் நான்.

உணவும் உடையும்
குறைப்பட்டுப் போனதற்காக
ஒருபோதும் வருந்தியதில்லை
ஆயினும்
இரவு படிப்புக்கு மின்விளக்கும்
புத்தகங்கள் அடுக்க ஓர் அலமாரியும்
இல்லாமல் போனதற்காக
பெரிதும் வருந்துகிறேன்..