பொன்வானம் ஏழ்வண்ணம் கொள்ள
வெண்நிலா அல்நீலம் கொள்ள
நான் மோகனன் ஒளிக்கனல் கொண்டேன்…
களவின் அந்நாணத்தை கொல்ல
நிலவின் எவ்விடத்தை வெல்ல
நீ மேனகை களியாடல் கொண்டாய்…
கால் தடம் பதிக்கும் எண்ணம் கொய்ய
கால் விலங்கு தடுக்கும் என்ன செய்ய
நாம் இந்திரலோகம் கொண்டோம்…
முன்பு வளர்வதும் பின்பு தேய்வதுமாய்
நான் சற்று இருள்கிறேன்…
நீதான் நிலா
ஆனாலும் முப்பது நாளும் ஒளிர்கிறாய்…
ஆதலால்
எங்கிருந்து சாபம் வரினும்
இங்கிருந்து தாபம் கொள்வோம்…
காதல் சரி என்பவர்கள்
ஆங்காங்கே நட்சத்திரங்களாய் மின்னுகிறார்கள்
காதல் தவறு என்பவர்கள்
இங்கே முண்டியடித்து வரிசையில் வருகிறார்கள்
கள்ளத்தோணியில் நிலவுக்கு பயணித்தல் குறித்து
நான் அவர்களுக்கு கதை சொல்ல
இல்லமின்றி நிலவில் குடியேறுதல் குறித்து
நீ அவர்களுக்கு கவி சொல்ல
’கேரி சேப்மேன்’ புத்தகம் ஒன்றை மட்டும்
நாம் அவர்களுக்கு பரிசளிப்போம்…
- மகேஷ் பொன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக