தேனீர் அருந்துவது…
புகை வளிப்பது…
தினம் ஒரு செல்ஃபி…
கொஞ்ச நாள் வழக்கம்தான்
சட்டென்று யாரால்
விட்டுவிட முடிகிறது?
ஒன்பதாயிரத்து
அறுபத்தாறு நாட்கள்
எனக்கு பழக்கமாயிருந்த
ஒற்றைச் சொல்
பட்டென்று உதிர்ந்துவிட்டதே
-
என் அகராதியிலிருந்து
நிரந்தரமாய்!
தேவைகளின் நிறைவும்
அன்புக்கு அம்மாவும்
பாதுகாப்புக்கு
உடன்பிறப்பும்
உறவுக்கு உற்றாரும்
-
இருக்கிறோம் என்பதை
என்னவெல்லாம் செய்து
நிருபித்தாலும்
நான் அதை உணர்ந்துக்கொள்ள
நீ இருக்கிறாய்
என்பது மட்டும் போதுமே!
அன்பின் குரல்
ஊமையாகிவிட்டது…
பரிவின் பார்வை
குருடாகிவிட்டது…
அணைப்பின் கரங்கள்
ஊனமாகிவிட்டது…
பாதுகாப்பின் கால்கள்
முடமாகிவிட்டது…
இனி உடன் நடப்பார்
யார் எவரோ?
இளைப்பாறும் ஆலமரம்
சரிந்துவிட்டதே!
நிறுத்ததிலிருந்து
பாதிதூரம் வந்துவிட்டேன்
வியர்க்கும்! வீடு
வந்து சேரமாட்டேனா…
நின் இயலாமையைக்
கண்டதேயில்லை
இனி என் போதமையை
ஏற்கமாட்டேனா…
எனக்காக யாரும்
இருக்கலாம்
ஆனாலும் நீ இல்லாத
ராஜ்யத்தில்
நான் இளவரசியாக
இருக்கமுடியாதே!
தாய்யை இழக்கையில்
பாசத்தையும்
தந்தையை இழக்கையில் -
இழக்கிறோம்
அடைக்கோழியின் கதகதப்பையும்...
பிள்ளைகளையும்
பத்துமாதம் சுமந்தவளையும்
சேர்த்து சுமந்த
சுமைதாங்கி
சற்று நேரம் ஓய்வு
கொள்ளுமோ?
ஒரு கோர விபத்து…
ஒரு குண்டு வெடிப்பு…
ஒரு பூகம்பம்…
ஒரு கொடும் மழை…
ஒரு பெரும் புயல்…
ஒரு ஆழிப்பேரலை…
ஒரு கொல்லை நோய்…
எதுவும் நிகழாதவரை
நேற்றும் இன்றும்
ஒரு நாள்தான்
நாளையும் மற்றுமொரு
நாள்தான்
ஆனால் இன்றைய மீளாப்
பிரிவு
ஒரு பேரிழப்பு!
ஒரு பேரிடர்!!
எனை உச்சத்தில்
தொங்கவிட்டுவிட்டு
ஏணியை உருவிக்கொண்டது
அது
அம்மா செல்லமா?
அப்பா செல்லமா?
நான் யார் செல்லம்
என்று
எனது ஒளிவட்டம்
சொல்லுமே
சூரியன் ஒளிதர
மறுத்தப் பின்
இந்த மதி எங்ஙம்
ஒளிருமோ
உன் கடைசி வார்த்தையின்
சாரம் என்ன
உன் கடைசி பார்வையின்
அர்த்தம் என்ன
உன் கடைசி தொடுகையின்
அழுத்தம் என்ன
உன் கடைசி எண்ணத்தின்
ஓட்டம் என்ன
இந்த வெண்மதியை
திருமதியாக்காமல்
வெறுமதியாய் விட்டோமென
நிம்மதியில்லாமல்
போனாயா என் அப்பா
றெக்கை முளைதேன்!
மேலே பறப்பேன்!!
என் பெருமைப் பேச
நீ இல்லையே!!!
அதானாலென்ன
உன் இன்சியலோடுதான்
வாழப்போகிறேன்…
”என்னோற்றான் கொல்எனும்
சொல்”
அந் நாளை வேண்டுகிறேன்.
- மகேஷ் பொன்

