23 நவம்பர் 2019

நிலவில் குடியேறுதல் குறித்து


நதியில் கல்லெரிந்து
உன் முகம் கலைத்தவன் நான்
மொண்டுவந்த குடத்து நீரில்
வாசல்வரை வந்தவள் நீ
ஓதங்கள் உயரும் பொழுதுகள் நீளும்
ம்ம்… ஈர்ப்பில் ஒவ்வொரு செல்லும் வீழும்…

பண்பாட்டின் தவிர்க்கவியலா தொன்மம் நீ
எப்போதும் கவிஞர்களின் பாடுபொருள் நீ
என் பால்யத்தின் முதல் பாடல் நீ
சாளரவெளியின் வரையா ஓவியம் நீ
நாடோடிகளின் வழித்துணை நீ
கடல்பாடுகளின் ஒளி விளக்கம் நீ
இந்த வானத்தை இன்னமும் அழகாக்கியது நீ
ஆண்மைச் செருக்கும்
ஒர் அழகிய வாழ்வும்
இத்தனை நாள் இத்தனை நாள்
நான் பேணி வளர்த்த அறமும்
உன் நிரந்தர கிரகணத்தில்
கர்ணமடித்து குப்புற விழுவதை பார்…

செவிடன் இழந்த ராஜாவின் பாடலைப் போல்
குருடன் இழந்த அடவியின் எழிலைப் போல்
குடியானவன் நான்
இழந்துவிட்டேனோ நிலவில் குடியேறுதலை…

தீயாய் இருக்கும் நயனின் ஒளியிலும்
உருகாத பெரிய வெந்நெய் இவன்
நிலவொளியில் இப்படி உருகி வழிவானேன்
வழியவந்து வழிகிறேன் உன்னை
வழியட்டுமே ஏன் நிறுத்தனும் என்னை

பெயரறியா ஆதி எச்ச சாம்ராஜ்யத்தின்
ஓர் இளவரசி விட்டுச்சென்ற இடத்தில்
ஒரு போர் மள்ளன் அப்படியே நிற்கிறான்
இத்தனை யுகங்கள் கடந்துவிட்டது
நீ என்னை கடந்து செல்லும் அந்த கணம்தான்
இன்னமும் இன்னமும் வரவில்லை…

நிலவில் கால்பதிக்கும் எண்ணத்தில்தான்
நிலா முற்றத்தில் விடியும்வரை காய்கிறேன்

பார்! எண்ணவலை விசித்திரமாகும்
முகர்! வெறுமையில் களியுறுவாய்
பழகு! எப்போதும் விலகமாட்டாய்
உன் மனம் குதுகளிக்கும் இடங்கள்
என்னை கூட்டிச்சென்ற இடங்கள்தான்
எண்! நம் புனர் ஜென்மத்தை இன்னும் ஆழமாய்
இருக்கிறேன் நான் நிலவில்லாத நீல வானமாய்

எண் வகையினில் நீ வேட்டை நிலா
லூனார் ரேகையின் ஊடுறுவலில்
மான்களுக்கு மட்டுமல்ல
என் போன்ற ஆண்களுக்கும் பைத்தியம் பிடிக்கிறது
பழங்குடி பகழியின் கூர்விழியால்
என்னை குத்தி கொலை செய்து
கொன்று தின்கிறாய்….
நிலாவா என்றேன் ஆம் என்றாய்
விசாரித்தேன்
ஒருவன் குறை நிலா என்றான்
நின் ஒரே தோழி அரை நிலா என்றாள்
ஊரார் பிறை நிலா என்றனர்
அவர்களுக்கு எப்படி புரியவைப்பது
நீ முப்பது நாளும் நிறை நிலா என்று…


கருத்துகள் இல்லை: