14 ஏப்ரல் 2014

அழகு பேய்

கொலைவெறி கொண்ட விழிகள்..
இரத்தம் படிந்தாற்போல் உதடுகள்..
இருண்ட கூந்தல்..
மேலும் 
பத்து விரல்களிலும் நகம் வள்ர்க்கிறாய்..
நீ பேய்தான் என்பதை 
இப்படிவேறு நிருபிக்க வேண்டுமா?
பேய்ப்பிடித்து ஆட்டுவதைப் போல்தானே 
எனை நீ பிடித்து ஆட்டுகிறாய்.

வறுமைக்குப் பிறந்தவன்

கடுகளவு வாழ்க்கை எனின்
கடலளவு விஸ்தரித்திருக்கலாம் 
புள்ளியில் வாழ்ந்திருந்தால்
கோலத்தை நீட்டித்திருக்கலாம்
நானோ புள்ளியுமின்றி வாழ்கிறேன்
என் சுற்றத்தாரோ புள்ளிவைத்து தரும்
முறைமையையும் அறியாதிருக்கிறார்கள்
அன்புநேர்மை.. உழைப்பு.. – என
குணதில் நான் குபேரன்தான் 
இருந்தும், வாழ்வின் உச்சம் என்பது
பணத்தின் மிச்சத்தில் அல்லவா இருக்கிறது
ஆகையால், நான் இங்கு ஏழைதான்..
வறுமைக்காக சாகவும்
வறுமையோடு சாகவும்
என்னால் முடியாது
இந்திய உணவகங்களில் பெஞ்ச் துடைக்கவும்
அரேபியாவில் கக்கூஸ் கழுவவும்
எனக்கு ஆட்சபணை ஒன்றுமில்லை.
வியர்வை நீரோடையாய்ப் பெருகினும்
உயர்வு என்னவோ கானல் நீர்தான்.
மனங்கொல்வதற்கும் பாவங்களுக்கும் அஞ்ச வேண்டும்
எனினும் நிறையவே பணமும் வேண்டும்.
இப்போது தேவைக்கு பணத்தை எடுத்துக்கொள்
பிறகு நரகம் செல்’ – என்றால்
தேவைக்கதிகமாய் பணத்தையே எடுத்துக்கொள்வேன்
ஏனெனில் பணம் இல்லார்க்கு இவ்வுலகமில்லை”